மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவை ஒரு மாமன்ற உறுப்பினரே மீறும் போது பொதுமக்களும் மீறத்தான் செய்வார்கள்


 மதுரை பழைய விளாங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் மாமன்ற உறுப்பினருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளார் அவர் கூறுகையில் 

மதுரை பழைய விளாங்குடியில் உள்ள மந்தை திடலில் காமாட்சி அம்மன் கோயில், முருகன் கோயில், ரேஷன்கடை உள்ளது. மந்தைத்திடலின் அருகில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் முன்பகுதியில் ஒரு தனியார் லாரி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்போருக்கு அங்கன்வாடி உள்ளே என்ன நடக்கிறது? என்றே தெரியவில்லை. அங்கன்வாடி மையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும். மேலும் நிரந்தரமாக இங்கு நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ள லாரியை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது சம்பந்தமாக 20வது வார்டு மாமன்ற உறுப்பினரிடமும் புகார் தெரிவிக்கப் பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார். ஆனால் இன்றுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

மந்தைத்திடலில் தனியார் வாகனமான குட்டியானை என்று சொல்லக்கூடிய வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதிமுக சார்பாக பொதுமக்களின் நலன்கருதி இலவச அமரர் ஊர்தி வாகனம் மக்கள் பொதுபயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அந்த வாகனம் தற்போது மந்தை திடலில் நிறுத்தப்பட்டுள்ளது. சிலர் மாடுகளை கட்டி வைத்து  திடல் முழுவதும் மாட்டுச்சாணம் உள்ளதால் அதை யாரும் சுத்தப் படுத்துவதும் இல்லை. அதனால் துர்நாற்றம் வீசுவதோடு மந்தை முழுவதும் சுகாதாரமற்ற முறையிலும் குப்பைகளாகவும் காட்சியளிக்கிறது. 

இலவச அமரர் ஊர்தி வாகனத்தையும் மந்தை திடலில் நிறுத்தி வைத்துள்ளதால் அங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாமிதரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது இந்த வாகனத்தை பார்க்கும் போதெல்லாம் ஒருவித அச்சம் கொள்கின்றனர். அங்குள்ள பிள்ளைகள் அந்த வாகனத்தில் ஏறி விளையாடு கின்றனர். இதை பார்க்கும் பெற்றோர்களுக்கு ஒருவித பயம் ஏற்படுகிறது. மக்களின் உயிர் காக்கும் இலவச ஆம்புலன்ஸ் சேவை வாகனம் என்றால் இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த யாரும் கூறப் போவதில்லை. அமரர் ஊர்தி வாகனம், இதை முதலில் மாமன்ற உறுப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் இந்த வாகனத்தை பழைய விளாங்குடியில் செயல்படும் மயானத்தின் அருகிலேயே நிறுத்தி வைக்கலாம். அங்கு இடமும் இருக்கிறது. அதை விட்டுவிட்டு ஊரின் நடுவில் பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இடங்களில் நிறுத்தி வைப்பது எந்தவகையில் நியாயம்???? 

அரசுப்பேருந்து பழையவிளாங்குடி வரை வந்து செல்கிறது. அப்படி வரும் பேருந்து மந்தை திடலில் தான் நிற்கும். ஆனால் மந்தைத் திடலில் தனியார் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்தால் அரசு பேருந்தை எப்படி நிறுத்த முடியும்? மந்தை திடலில் மதுரை மாநகராட்சி சார்பாக ஓர் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். அதில் மந்தைத்திடலில் மாடுகள் கட்டுவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை அறிவிப்பு பலகை தற்போது அந்த மந்தை திடலில் இருக்கிறது. அப்படி இருந்தும் மாடுகளை கட்டி வைப்பதும், வாகனங்களை நிறுத்தி மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவை காற்றில் பறக்க வைத்துள்ளனர். 

20வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கு இது தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாரா? மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவை ஒரு மாமன்ற உறுப்பினரே மீறும் போது பொதுமக்களும் மீறத்தான் செய்வார்கள். 

இந்த பிரச்சனை குறித்து மாமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு செலுத்தியும் இதுவரை இலவச அமரர் ஊர்தி வாகனத்தையும் அப்புறப் படுத்தவில்லை. தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த முயற்சி செய்யவில்லை. வேலியே பயிரை மேய்ந்த கதை போல இவரே சட்டத்தை மதிக்கவில்லை என்றால் பின்பு யார் மதிப்பது?




கருத்துரையிடுக

0 கருத்துகள்