உசிலம்பட்டி: ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்பாகவே தண்ணீரை கண்மாய்களில் தேக்கி மடை அமைத்து விவசாய பணிகளுக்கு வழங்கிய நீர் மேலாண்மை குறித்து தமிழ் வட்டெழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
சேடபட்டிஒன்றியம் மேலத்திரு மாணிக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் 148.2 ஹெக்டேர் பரப்பளவும், 1,832 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கும் வகையிலும், சுமார் 320 ஏக்கர் பாசனம் பெறும் வகையில் கண்மாய் உள்ளது. கண்மாயின் கிழக்கு பகுதியில் சுமார் 8 அடி உயரமான இணை தூண்களும், இரண்டு உயரங்களில் 4 அடி மட்ட கல் பலகைள் இணைக்கப்பட்டுள்ளன. இணை தூணின் வடக்கு தூணில் பன்னிரண்டு வரிகளில் தமிழ் வட்டெழுத்துக்கள் 12 வரிகள் பொறிக்கப் பட்டுள்ளது. இதனை கள ஆய்வுக்கு வந்த மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்கள் பிறையா, ராஜகோபால் ஆகியோர் கண்டறிந்தனர். தமிழர்கள் விவசாயத்திற்கு நீர் மேலாண்மை பணிகளில் கவனம் செலுத்தி வந்ததை இந்த கல்வெட்டு எடுத்துக் காட்டுகிறது.
9,10 ஆம் நூற்றாண்டு காலத்தில் வழக்கத்தில் இருந்த தமிழ் வட்டெழுத்து கல்வெட்டை முன்னாள் தொல்லியல் துறை உதவி இயக்குனர் சாந்தலிங்கம் உதவியுடன் படித்ததில், 'கூடர்க்குடியைச் சேர்ந்த சாந்தன வைரயனாக இருந்த தட்டான் (தங்கதமிழக ஆபரணங்கள் பொற்கொல்லர்) இந்த வேம்பங்குடி மடையை கட்டியது மட்டுமல்லாமல் மடையை பாதுகாக்கும் பொருட்டு அதற்கு வரி கொடுத்து ஆண்டிற்கு மூன்று போக வேளாண்மை செய்ய குடி மக்களுக்கு நன்மை செய்வித்தான் என்று எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேம்பங்குடி என அழைக்கப்பட்ட இந்த பகுதி மறைந்து, தற்போது திருமாணிக்கம், டி.மினாட்சிபுரம் என்ற ஊர்களாக உள்ளது. கூடர்க்குடி என்ற ஊர் விருதுநகர் அருகே தற்போது ஆர்.ஆர்.நகர் பகுதியை குறிப்பிடுகிறது. கடந்த 9,10 ம் நூற்றாண்டில் இந்த பகுதியில் பொற்கொல்லர்கள் வாழ்ந்துள்ளனர்.
கண்மாயில் நீரின் அளவை காட்ட இந்த மடையில் அமைக்கப்பட்டிருந்த இணைப்பு பலகை கற்கள் பக்கத்தில் கிடக்கிறது. கல்வெட்டின் முதல் வரியில் ஸஸ்த ஸ்ரீ என இடம் பெற்றுள்ளது. அந்த காலகட்டத்தில் இருந்த மன்னரின் மெய்க்கீர்த்தி குறிப்பிடாமல், மடை அமைக்க உதவிய பொற்கொல்லரின் பெயரும், ஊரும் குறிப்பிடப்பட்டுள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். தற்போது கண்மாய்க்கு நீர் வரத்து ஓடைகள் தூர்ந்து போய் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் காய்ந்து கிடக்கிறது.
0 கருத்துகள்