காப்பாற்றுவது குத்தமாய்யா?... செய்தியாளர் ஆதங்கம்
மதுரை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் எண்ணற்ற பொதுமக்கள் பல்வேறு பிரச்சினை களுக்காக கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவது வழக்கம். சமீபகாலமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்வதனால் அங்கு பரபரப்பு ஏற்படுத்துவது தொடர் கதையாக இருக்கிறது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நுழைவாயிலில் காவல் துறையினரின் பல அடுக்கு பரிசோதனைகளுக்குப் பின் அனைவரையும் உள்ளே அனுப்பு கின்றனர். குறைதீர்க்கும் நாளான இன்று 30.05.2022 திங்கட்கிழமை என்பதனால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைவரையும் பரிசோதனை செய்து காவல் துறையினர் அலுவலகத்தின் உள்ளே அனுப்பினர்.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவர் பழைய மாவட்ட ஆட்சியர் கட்டிடம் அருகில் திடீரென்று தன் பைக்குள் வைத்திருந்த மண்ணென்னை கேனை எடுத்து இருவரும் மாறி மாறி தலையில் ஊற்றிக் கொண்டனர். பழைய செய்தியாளர்கள் அறையின் அருகே அமர்ந்திருந்த ஒரு செய்தியாளர் இதைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். உடனே விரைந்து சென்று அவர்களைத் தடுக்க முயற்சித்த போதும், விடாமல் இருவரும் தலையில் மாறி மாறி மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டனா்.
இதைக்கண்டு செய்வதறியாது திகைத்த செய்தியாளர், இவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ஆண் நபரை இரண்டு அடி அடித்துள்ளார். அவர்கள் இருவரும் மண்ணெண்ணையை ஊற்றுவதை நிறுத்தி விட்டு நிதானத்துக்கு வந்துள்ளனர்.
இதை கவனித்த காவல்துறை அதிகாரி ஒருவர், கணவன்-மனைவி இருவரையும் காப்பாற்றிய செய்தியாளரை பாராட்டாமல், உங்களுக்கும் இவர் களுக்கும் என்ன தொடர்பு? ஏன் தடுக்கிறீர்கள்? என்று அர்த்தமற்ற கேள்வியை கேட்டதும் இல்லாமல், இவரை அடித்ததற்கு உங்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறியுள்ளாா். அதற்கு அந்த செய்தியாளர், இருவர் உயிரை காப்பாற்றியதற்கு தண்டனையா எனக்கு? வழக்குப்பதிவு செய்வதென்றால் செய்து கொள்ளுங்கள்.... அதை நான் எதிர் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். உடனே உயர் அதிகாாரி இந்த விவகாரத்தில் தலையிட்டு செய்தியாளரை, நீங்கள் செல்லுங்கள்... நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்... என்று கூறியுள்ளார்.
இதைப்பார்த்த அங்கு வந்த சில பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலில் எண்ணற்ற காவல் துறையினர் இருந்தும், அனைவரையும் பரிசோதித்த பின் எப்படி இந்த தம்பதியர் மண்ணெண்ணெய் கேனுடன் உள்ளே வந்தார்கள்? காவல்துறையினர் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டு.... பரிசோதனை செய்து அனுப்புகிறோம் என்று கூறிக்கொண்டு, கெடுபிடி காட்டும் இந்த காவலர்களுக்கு மத்தியில், தம்பதியர்கள் செய்த செயலை செய்தியாளர் செய்தியாக்காமல், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் இருவரையும் விரைந்து வந்து காப்பாற்றி உள்ளார்.
இதை பாராட்டாமல், செய்தியாளர் மீது வழக்குப் பதிவேன் எனக் கூறுவது நியாயமற்ற செயல். ஒருவேளை அந்த தம்பதியினருக்கு ஏதாவது விபரீதம் நடந்து இருந்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஒட்டுமொத்த காவலர்களும் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலை இருந்திருக்கும். செய்தியாளர் விரைந்து செயல்பட்டு, காவலர்கள் அனைவரையும் காப்பாற்றி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும் என மனு கொடுப்பதற்காக அங்கு வந்திருந்த பொதுமக்கள் பேசிக்கொண்டனா்.
0 கருத்துகள்