தேசிய சராசரியை விட, தமிழகத்தில் பயிலும் 3, 5, 8 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் செயல்திறன் குறைவாக இருப்பதாக தேசிய சாதனை கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கல்வியில், மாணவர்கள் எப்படி கற்பது, கற்க ஊக்கப்படுத்துவது, ஆசிரியர் எவ்வாறு கற்பிப்ப்பது போன்றவற்றை மதிப்பிடுவது மிக முக்கியமானதாகும். அதனடிப்படையில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேசிய சாதனை கணக்கெடுப்பு (National Achievement survey) எனும் மதிப்பீடுத் திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இதன் கீழ், நாடு முழுவதும் 3, 5, 8, 10ம் வகுப்பு மாணவர்களின் கற்கும் திறன் மதிப்பீடு செய்யப்படுகிறது. இதற்கு முன்பு கடைசியாக 2017ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி நடந்தது.
2021ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு நாடு முழுவதும், கடந்தாண்டு நவம்பர் 12ம் தேதி நடத்தப்பட்டது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 733 மாவட்டங்களில் சுமார் 1.23 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 38 லட்சம் மாணவர்கள் இந்த கணக்கெடுப்பில் கலந்து கொண்டனர். கணிதம், மாநில மொழிப்பாடம், அறிவியல், சமூக அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
மேலும், கல்வி சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் விதமாக திட்டமிட்ட கேள்விகள் மூலம் பதில்கள் பெறப்பட்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டின் 3ம் வகுப்பு மாணவர்களின் சராசரி கற்றல் திறன் விகிதம் 49% ஆக உள்ளது. தமிழகத்தின் இந்த சராசரி எண்ணிக்கை 45.6% ஆகும். இதில், குறிப்பிட்டு கூறும் வகையில், நாமக்கல், தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் திறம்பட கற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 25%க்கும் குறைவாக உள்ளது. 5, 8, 10 ஆகிய வகுப்புகளிலும் இத்தகைய போக்கே காணப்படுகிறது.
பொதுவாக, கற்றல் என்பது ஒரு சிக்கலான செயல் என்று கல்வியாளர்கள் தெரிவிக் கின்றனர். வகுப்பிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளும் மாணவர்களின் கற்றல் திறனை தீர்மானிக்கிறது. இந்த கணக்கெடுப்பில் பெறப்பட்ட தகவல்களும் இதே உறுதி செய்கின்றன. உதாரணமாக, மாநிலத்தில் மாணவர்களின் கற்றல் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் கிராமப்புறப் பள்ளிகளைவிட நகர்ப்புற பள்ளிகள் சிறந்து விளங்குவதாக தெரியவந்துள்ளது. மேலும், ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட பொதுப் பிரிவு மாணவர்கள் கல்வியில் சிறப்புற விளங்கு வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்