ஒரு லிட்டர் கழுதை பால் விலை ரூ.7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை- பட்டதாரி இளைஞர்கள் சாதனை

 திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே ஆலங்குளம் செல்லும் சாலையில் 10 ஏக்கர்  நிலப்பரப்பில்  கழுதை பண்ணை ஒன்றை பட்டதாரி இளைஞர்கள் இருவர் சேர்ந்து துவக்கியுள்ளனர். தமிழகத்தில் முதன்முறையாக  துவக்கப்பட்டுள்ள  வணிக ரீதியிலான  கழுதை பண்ணை  இதுவாகும். மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இப்பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. கழுதை வளர்ப்பை நவீன படுத்தியதோடு அதில் கழுதைகள் வளர்ப்பிற்கான கொட்டகை, குறிக்குமிடம் பால் கறக்குமிடம், குட்டிகளுக்கு பால் கொடுக்குமிடம், இதோடு வாத்து வளர்ப்பு, முயல் வளர்ப்பு ஆகியவையும்  இங்குள்ளது. 

தமிழகத்தின் முதல் கழுதை பண்ணையை நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு திறந்து வைத்தார்.  இது குறித்து கழுதை பண்ணையை சேர்ந்த கிரி செளந்தர் கூறுகையில்   அழிவின் விளிம்பில் இருந்து கழுதை இனத்தை காக்கும் வகையிலும் கழுதை பாலின் மகத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும்  தமிழகத்தில் முதன்முறையாக கழுதை பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது.  தற்போது 100 கழுதைகள் எங்களிடம் உள்ள நிலையில் விரைவில் ஆயிரம் கழுதைகள் கொண்ட பண்ணையாக மேம்படுத்த திட்டமிட்டு உள்ளோம். கழுதைப் பால் மூலம் பல்வேறு அழகு சாதன பொருட்கள் தயார் செய்யப்படுகிறது.

தினமும் ஆயிரம் லிட்டர் பால் தேவைப்படும் நிலையில் 400 லிட்டர் மட்டுமே கிடைக்கிறது.  தேவை அதிகமாக உள்ள நிலையில் ஒரு கழுதை மூலம் நாள் ஒன்றுக்கு 500 மி.லிட்டர்  முதல் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பால் மட்டுமே கிடைக்கும். தேவை அதிகமாக இருப்பதால் இந்த தொழிலுக்கு வந்துள்ளதாத தெரிவித்தனர்.  மேலும் இந்த இடத்தை பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இடமாக மாற்றவும் திட்டமிட்டு உள்ளனர்.

ஒரு லிட்டர் பாலின் விலை 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனையாகிறது. 50 மி.லிட்டர்  500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இனிமேல் படிப்பு ஏறாதவன கழுதை மேய்க்க தான் லாயக்கு என்பார்கள். ஆனால் கழுதை மேய்ப்பும்  சிறந்த தொழிலாக மாறியுள்ளது.

கழுதை என்ற விலங்கு  மனிதனுக்கு உதவியாக இருந்தாலும்  அதனை ஒரு பொருட்டாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை. அந்த காலங்களில் துணிகள் துவைக்கும் தொழில் செய்து வந்த நபர்களுக்கு உதவியாக இருந்தது கழுதை. சுமை தூக்கவும் நீண்ட தூரங்களுக்கு கொண்டு செல்லவும் பயன்பட்டது. பாலைவனங்களில் மனிதனை சுமந்து செல்லவும் பயன்படுத்தபட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் 71 சதவீத கழுதைகள் அழிந்து விட்டதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.   இது புறம் இருக்க கழுதை பாலின் மகத்துவத்தை மக்கள் உணர தொடங்கி உள்ளனர்.  தாய்ப்பாலுக்கு இணையாக கருதப்படும் கழுதைப் பாலில் கால்சியமும் பாஸ்பரசும் நிறைந்துள்ளது ;தாய்ப்பாலை விட எளிதில் செரிமானம் ஆகும் வகையில் கழுதைப் பால் உள்ளது. இதில் விட்டமின் ஏ , பி 1, பி 2, சி, ஈ ஆகியவை உள்ளது, ஒமேகா 3 என்ற உடலுக்கு கேடு விளைவிக்காமல் நன்மை செய்யும் கொழுப்பு கழுதை பாலில் நிறைந்துள்ளது.

மருத்துவ குணங்கள் நிறைந்த கழுதை பால் உடலில் புற்று நோய் தாக்கத்தை குறைக்கும் காரணியாக விளங்குவதாக மேலை நாட்டு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மருந்துகள் தயாரிப்பில் கழுதைப்பால் பயன்படுத்தப்படும் நிலையில் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில், சோப்பு தயாரிப்பில் கழுதை பால் முக்கிய பங்காற்றுகிறது. எகிப்து பேரழகி கிளியோபட்ரா  கழுதைபாலில் குளித்ததாக கூறப்படுவது உண்டு.
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்